Published : 17 Jul 2020 01:50 PM
Last Updated : 17 Jul 2020 01:50 PM

கல்விக் கட்டணம் தொடர்பான வழக்கு: இன்று மதியம் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு 

கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்கிற அரசு உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் இன்று மதியம் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்க உள்ளது.

கல்வி கட்டணத்தை வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவை எதிர்த்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சங்கங்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளில் தமிழக உயர் கல்வி துறை தாக்கல் செய்த பதில் மனுவில், “சுயநிதி கல்லூரிகள் இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை மூன்று தவணைகளில் ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதங்களில் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்குகள் இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், “அரசு உதவி பெறாத பள்ளிகளில் இந்த ஆண்டு கல்வி கட்டணத்தில் 75 சதவிகிதத்தை மூன்று தவணைகளில் வசூலிக்க அனுமதிக்கலாம் என தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

தற்போது 25%, பள்ளிகள் திறக்கும்போது 25%, அதற்கு அடுத்த மூன்றுமாதம் கழித்து 25% என வசூலிக்க அனுமதிக்க உள்ளோம். இந்த கல்வியாண்டு கட்டணம் எவ்வளவு என்பதை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணய குழு முடிவெடுக்கும்”.என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி , “கட்டண நிர்ணய குழுவிற்கு உதவிபுரிய கல்வியாளர்களை அதில் சேர்க்கலாமே” என கேட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில்தான் அந்த குழு தற்போது செயல்படுவதால், அதற்கு அவசியமில்லை” என அரசு தரப்பு தெரிவித்தது.

கல்வி நிறுவனங்கள் தரப்பு வாதத்தில், “இந்த ஆண்டு ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என இடைக்கால உத்தரவில் பிறப்பிக்க வேண்டும். பாட புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும் என மாணவர்களின் நலன் கருதி கேட்கிறோம்.

அரசின் உத்தரவுகளுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கோம், அதேசமயம் கல்வி நிறுவனங்களின் நலனை கருத்தில் கொள்ளவேண்டும். கல்வி நிறுவன கட்டிடங்களின் சொத்துவரி தொடர்பாக அரசிடம் கொடுத்த மனுவை பரிசீலிக்கவும் உத்தரவிட வேண்டும்”. எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், “ கல்வி நிறுவங்கள்தான் வழக்குகள் அதிகமாக தொடர்ந்துள்ளது. பல மாணவர்கள், பெற்றோர்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக அரசுக்கு மனுக்களை அனுப்பி உள்ளனர். எனவே கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அனைவரின் தரப்பு கருத்தையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது”. என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் மதியம் 2:15க்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x