இரு பெண் ஊழியர்களுக்கு கரோனா தொற்று: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 'சீல்' வைப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

நாமக்கல் ஆட்சியர் அலுவலகப் பெண் ஊழியர்கள் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தின் மூன்று தளங்களுக்கும் சீல் வைக்கப்பட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் இருவர், கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து, இன்று (ஜூலை 16) ஆட்சியர் அலுவலக முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் ஆகிய மூன்று தளங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

அந்த அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், மகளிர் திட்ட அலுவலகத்திலும், மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்திலும் அமர்ந்து பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் மூலம் கிருமிநாசினி மருந்து தெளித்து நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேவேளையில், வெளிநபர்கள் உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 16) வரை கரோனா வைரஸ் தொற்றால் 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 137 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in