Last Updated : 16 Jul, 2020 06:33 PM

 

Published : 16 Jul 2020 06:33 PM
Last Updated : 16 Jul 2020 06:33 PM

சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி  மீன் பிடிப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பு: 33 கிராம மீனவர்கள் சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு

சார் ஆட்சியரிடம் மனு அளித்த மீனவப் பிரதிநிதிகள்.

கடலூர்

சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என பரங்கிப்பேட்டை பகுதி 33 கிராம மீனவர்கள், சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகேயுள்ள கடற்கரையோர மீனவ கிராமங்களான சாமியார் பேட்டை, புதுப்பேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட 33 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஒன்றுசேர்ந்து சுருக்குமடி வலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர்.

இந்நிலையில், ஒரு சில மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக வந்த தகவலையடுத்து இன்று (ஜூலை 16) 33 கிராமங்களைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜனைச் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், "சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதைத் தடுத்து எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் துன்பப்பட்டு வருகின்றோம். எனவே, எங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்காக சுருக்குமடி வலைகளைத் தடை செய்ய வேண்டும். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மீனவப் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சுருக்குமடி வலை தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்தாலும் மீண்டும், மீண்டும் ஏன் அவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. மேலும், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துவிட்டு வந்தோம்.

ஆனால், மீண்டும் இன்று சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக தகவல் வந்துள்ளது. அரசாங்கம் இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 33 கிராம மக்களையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். மேலும், கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x