Last Updated : 16 Jul, 2020 06:00 PM

 

Published : 16 Jul 2020 06:00 PM
Last Updated : 16 Jul 2020 06:00 PM

புதுச்சேரியில் தலைமை தபால் நிலையம் மூடல்; தனிமைப்படுத்திக்கொண்ட சுகாதாரத்துறை இயக்குநருக்குத் தொற்றில்லை

மூடப்பட்ட தலைமை தபால் நிலையம்.

புதுச்சேரி

ஊழியருக்குக் கரோனா தொற்றால் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் மூடப்பட்டது. இச்சூழலில் கரோனா தடுப்புப் பணிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் சுகாதாரத்துறை இயக்குநர் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதித்தார். அவருக்குத் தொற்றில்லை என்று முடிவு வெளியானது.

புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் ஆகியவற்றில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதுச்சேரி அரசு தனியார் மருத்துவக் கல்லூரி படுக்கைகளையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. .

இந்நிலையில், அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கும் கரோனா தொற்று வருவதால், கிருமிநாசினி தெளித்து அரசு அலுவலகங்கள் அடுத்தடுத்து 2 நாட்கள் மூடி, பின்னர் திறக்கின்றனர். புதுவை சட்டப்பேரவை, நகராட்சி அலுவலகம், நகர அமைப்பு குழுமம், காவல்நிலையங்கள், போக்குவரத்துத்துறை, ஆளுநர் மாளிகை ஆகியவற்றில் ஊழியர்களுக்கு ஏற்பட்ட தொற்றால் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு திறக்கப்பட்டன.

இந்நிலையில், புதுச்சேரியில் தலைமை தபால் நிலையம் இன்று (ஜூலை 16) மூடப்பட்டுள்ளது. ஊழியருக்கு ஏற்பட்ட கரோனா தொற்றால் அலுவலகம் மூடப்பட்டு அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

அதில், "கரோனா தொற்றால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளை தபால் நிலையங்களை அணுகவும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருமிநாசினியும் அங்கு தெளிக்கப்பட்டது.

அதேபோல், புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், கரோனா தடுப்புப் பணிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சமீபத்தில் பங்கேற்றார். இதில் பங்கேற்ற ஒருவருக்கு கரோனா உறுதியானது. இதையடுத்து, சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவரின் பரிசோதனை முடிவில் அவருக்குத் தொற்றில்லை என்பது தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x