Published : 15 Jul 2020 09:42 PM
Last Updated : 15 Jul 2020 09:42 PM

குடிசை இடிந்து விழுந்து பெண் பலி; அரசு ஒதுக்கிய வீட்டை ஒதுக்காத அதிகாரிகள்: மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு 

அரசின் வீடு கட்டித் தரும் திட்டத்தில் நடந்த மோசடியால் வீடில்லாமல், குடிசை வீடு இடிந்து விழுந்து பெண் பலியானது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புருஷோத்தம குப்பம் கிராமத்தில் அய்யம்மாள் என்பவர் தன் மகனுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். கடந்த வாரம் மழையில் குடிசை இடிந்து விழுந்ததில் அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு ஒதுக்கப்பட்டதாகக் கணக்கு எழுதி, வழங்கப்படாததால் அவர் குடிசை வீட்டில் தனது ஒரே மகனுடன் வசிக்க நேர்ந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தார். இதில் அவரது 13 வயது மகன் காயமடைந்தார்.

விசாரணையில், அனைவரும் வீடு திட்டத்தின் கீழ் அய்யம்மாளுக்குக் கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் வீடு ஒதுக்கப்பட்டதாகவும், 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து (suo-moto) வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையப் பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன், இச்சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x