Published : 15 Jul 2020 08:11 PM
Last Updated : 15 Jul 2020 08:11 PM

நளினி, முருகன் வெளிநாட்டு உறவினர்களுடன் பேச மத்திய அரசுதான் அனுமதிக்க முடியும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சென்னை

வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகனைப் பேச அனுமதிப்பதற்கு மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகனை, லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் அப் காணொலி மூலம் பேச அனுமதிக்கக் கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகத்தின் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசு எழுதிய கடிதத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் பேச விதிமுறை அனுமதிக்காது என்றால் நாமே ஒரு விதியை உருவாக்கினால் என்ன எனக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் நடராஜன், மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலைச் சமர்ப்பித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடிதத்தில் அனுமதிதான் கேட்டுள்ளீர்கள், ஏன் பரிந்துரை செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதில் அளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், அனுமதி அளிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து மத்திய அரசு இதுகுறித்து உரிய பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x