

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் முத்துராஜை சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு இரவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 10 பேர் மீதும் கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இதில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை சிபிஐ தங்கள் காவலில் எடுத்து, மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து கடந்த 2 நாட்களாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட காவலர் முத்துராஜை சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் எப்படி தாக்கினர், இரு தரப்பினரிடையே முன்விரோதம் ஏதும் இருந்ததா என பல்வேறு கோணங்களில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
காவல் நிலையத்தின் மாடி அறை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றும் விசாரித்தனர். இந்த விசாரணை சுமார் 1.30 மணி நேரம் நீடித்தது. பின்னர் காவலர் முத்துராஜை சிபிஐ அதிகாரிகள் மீண்டும் மதுரைக்கே அழைத்துச் சென்றனர்.