

‘‘ஊடகங்கள் சித்தாந்தத்தை சார்ந்து இயங்க கூடாது ,’’ என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தமிழ் ஊடகங்கள் இந்து விரோத, இந்திய விரோத தீய சக்திகளால் நிரப்பப்பட்டு இருக்கிறது. ஊடகங்கள் சித்தாந்தத்தைச் சார்ந்து இயங்கக் கூடாது. மாரிதாஸ் பேசியதில் உண்மை இருக்கிறது.
இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் அமைப்பினரை தமிழக அரசு உடனே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதில் காவல்துறை, அரசு பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.
முருகன் பிறந்த கார்த்திகை நட்சத்திர தினமான நாளை (ஜூலை 16) காலை 10 மணிக்கு அனைத்து இந்துக்களும் தங்களின் வீட்டின் முன்பாக முருகன் படம் வைத்து கந்தசஷ்டி கவசம் படித்து நமது எதிர்ப்பை காட்ட வேண்டும்.
தமிழகத்தில் இந்துக்கள் கவுரவமாக வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். மு.க.ஸ்டாலின், வைகோ, ப.சிதம்பரம் இந்து விரோதிகளாக உள்ளனர்.
மதச்சார்பின்மை என்பது அனைத்து மதத்தினரையும் மதித்து நடப்பது. இந்துகளுக்கு விரோதமாக நடப்பது அல்ல. பாஜக பிற மதத்தினரை விமர்சனம் செய்வதில்லை. தமிழக அரசியலில் தரம் கெட்டவர்கள் நிறைந்துள்ளனர். அவர்களை களை எடுக்காமல் விடக் கூடாது" என்று கூறினார்.