

மதங்களை, தலைவர்களை அவதூறாக சமூக வலைதளங்களில் சித்தரித்து வெளியாகும் காணொலிகளைத் தடுக்கும் வகையில் அரசு புதிய விதிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றதில் முறையீடு செய்யப்பட்டது.
மதங்களை, தலைவர்களைத் தவறாகச் சித்தரித்து யூடியூபில் காணொலி வெளியிட்டது தொடர்பாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
இதைத் தடுக்கும் வகையில் அரசு புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் மதங்களையும், தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக கானொலிகளைப் பதிவு செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மனுதாரரின் கோரிக்கையை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்தது. மேற்கொண்ட கோரிக்கைகளுடன் விரைவில் மனுத்தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.