Last Updated : 15 Jul, 2020 04:41 PM

 

Published : 15 Jul 2020 04:41 PM
Last Updated : 15 Jul 2020 04:41 PM

விஸ்வரூபம் எடுக்கும் மணல் கடத்தல் பிரச்சினை: இளையான்குடி அருகே 50 லாரிகளை கிராமமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு

இளையான்குடி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மணல் ஏற்றி சென்ற 50 லாரிகளை கிராமமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மணல் கடத்தல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் மண் மற்றும் மணல் குவாரிகள் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும் இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் உபரி மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று ஆறு, கண்மாய், ஓடைகளையொட்டி பகுதிகளில் உள்ள தனியார் நிலங்களில் மணல் கடத்தல் தாராளமாக நடந்து வருகிறது.

அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து கிராமமக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

சில சமயங்களில் மணல் அள்ளுவதை தடுக்கும் கிராமமக்கள் மீதே ஏதோவொரு வகையில் போலீஸார் வழக்கு பதிகின்றனர். இந்நிலையில் இளையான்குடி அருகே பிராமணக்குறிச்சி பகுதியில் வைகை ஆற்றையொட்டி தனியார் பட்டா நிலத்தில் 3 அடிக்கு கீழே மணல் கிடைக்கிறது.

இதையடுத்து சிலர் அப்பகுதியில் உபரி மண் அள்ளுவதற்கு அனுமதிபெற்று மணல் அள்ளி கடத்தி வந்தனர். இதற்கு அப்பகுதி கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நடவடிக்கை இல்லாததால் மணல் அள்ளி வந்த 50 லாரிகளை இன்று கச்சாத்தநல்லூர் கிராமமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டத்தில் விஸ்ரூபம் எடுத்துள்ள மணல் கடத்தல் பிரச்சினைக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் போலீஸார் லாரிகளை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘ குவாரிகளுக்கு தடை இருந்தும் பல அடி ஆழத்திற்கு மணல் அள்ளி கடத்தி வருகின்றனர். அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இப்பிரச்சினைக்கு நீதிமன்றம் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,’ என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x