Published : 15 Jul 2020 04:47 PM
Last Updated : 15 Jul 2020 04:47 PM

தினமும் காலை 10 மணிக்கு கரோனா விழிப்புணர்வுப் பிரச்சாரம்: சென்னை காவல்துறை முடிவு

சென்னை பெருநகரில் உள்ள அனைத்துப் போக்குவரத்து சிக்னல்களிலும் கரோனா வைரஸ் சம்பந்தமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை காவல்துறை சார்பாக முடிவெடுக்கப்பட்டு அமல்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைக் கணக்கில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சென்னை காவல்துறை முன்களப்பணியாளர்களாக காவல்துறையும் செயல்பட்டு வருகிறது. சென்னையில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.

தினமும் காவல்துறை வாகனம் மூலம் காலை 10 மணிக்குப் பிரச்சாரம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் சாலை சந்திப்புகளில் போலீஸார் பிரச்சாரம் செய்வார்கள். போலீஸார் மேற்கொள்ளும் பிரச்சாரம் வருமாறு:

“சென்னை பெருநகர பொதுமக்களே! உங்களுக்கு சென்னை பெருநகர காவல்துறையின் அன்பான வேண்டுகோள்;

1. அவசியமும் அத்தியாவசியமும் இல்லாமல், நீங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

2. நீங்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக் கவசத்தைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்.

3. நீங்கள் பொது இடங்களில் கூடுகின்றபொழுது, சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடியுங்கள்.

4. நீங்கள் அடிக்கடி கைகளைச் சோப்பினால் கழுவுங்கள். இத்தகைய செயல்பாடுகளின் மூலமே தொற்றினால் பாதிக்கபடாமலும், தொற்று பரவாமலும் தடுக்க முடியும்.

5. இத்தகைய அறிவுரைகளை நல்ல முறையில் கடைப்பிடித்து, கரோனாவுக்கு எதிரான போரில் வென்று, கரோனா இல்லாத சென்னை பெருநகரை உருவாக்க ஒத்துழைப்பு தாருங்கள்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x