Last Updated : 15 Jul, 2020 03:47 PM

 

Published : 15 Jul 2020 03:47 PM
Last Updated : 15 Jul 2020 03:47 PM

புதுச்சேரியில் புதிதாக 67 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 3 பேர் உயிரிழப்பு; இறப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் ஒருவர், ஜிப்மரில் 2 பேர் என ஒரே நாளில் 3 பேர் தொற்று பாதிப்பில் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூலை 15) புதிதாக 67 பேருக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,596 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 686 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 889 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் ஸ்ரீராமலு, கோவிட் நோடல் அதிகாரி ரமேஷ் ஆகியோர் இன்று கூறும்போது, "புதுச்சேரியில் 687 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது 67 பேருக்கு (9.8 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் 34 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 23 பேர் ஜிப்மரிலும், 10 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றால் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் ஒருவரும், ஜிப்மரில் 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். முத்தியால்பேட்டையை சேர்ந்த 76 வயது முதியவர் ஏற்கெனவே சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். மேலும், அவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்த பிரச்சினையும் இருந்தது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 13 ஆம் தேதி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். நோய் தொற்று அதிகமானதால் தீவிர சிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (ஜூலை 14) இரவு உயிரிழந்தார்.

லாஸ்பேட்டை மோதிலால் நகரை சேர்ந்த 62 வயது பெண் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் கடந்த 3 வாரமாக சிகிச்சை பெற்று வந்தார். தொற்று பாதிப்பு அதிகமானதால் கடந்த 29 ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஏற்கெனவே அவருக்கு தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருந்தது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மேலும், மூளக்குளம் ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 3 வாரமாக ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இதனால் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

நடுத்தர வயதினர் வெளியே வெளியே சென்றுவிட்டு வருவதால் வீட்டில் உள்ள வயதானவர்களும் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் வயதானவர்கள் இறப்பு அதிகரித்து வருகிறது. வயதானவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். நாள்பட்ட நோய்களுக்கு மருந்தை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 360 பேர், ஜிப்மரில் 132 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 111 பேர், காரைக்காலில் 55 பேர், ஏனாமில் 27 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 686 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 27 ஆயிரத்து 229 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 25 ஆயிரத்து 264 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. இன்னும் 302 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன.

இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் புதுச்சேரி முழுவதும் அனைவருக்கும் ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் கொடுத்து வருகிறோம். மேலும், அனைத்து கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் உள்ளவர்களுக்கும் கபசுர குடிநீர் கொடுத்து வருகிறோம். மற்ற பகுதிகளிலும் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சித்த மருத்துவர்கள் 2 பேரை கரோனா மருத்துவமனையில் நியமித்துள்ளோம்" என அவர்கள் தெரிவித்தனர்.

இன்று கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 32 பேர், ஜிப்மரில் 5 பேர், கோவிட் கேர் சென்டரில் 16 பேர், ஏனாமில் 7 பேர் என மொத்தம் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x