Published : 15 Jul 2020 11:39 AM
Last Updated : 15 Jul 2020 11:39 AM

புதிய மின் கட்டண வசூல் முறையை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி 

ஊரடங்கு காலத்தின் போது, மொத்தமாக 4 மாதம் கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து இரண்டிரண்டு மாதமாக கணக்கிட்டு வசூலிக்க உத்தரவிடக்கோரி, புதிய மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி கட்டணமாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான கட்டணமாகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது மின் வாரியம் மேற்கொள்ளும் மின் கட்டண கணக்கீடுப்படி, பொது மக்கள் கூடுதல் தொகை செலுத்த நிர்பந்திக்கபடுவதாக கூறி, அதற்கான விளக்க மனு ஒன்று மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மின்சார சட்ட விதிகளின்படி, ஊரடங்கு காலத்தின் போது, முந்தைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படுமே தவிர ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், ஊரடங்க காலத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததாலும், 18 முதல் 20 மணி நேரங்கள் வரை மின்சாரத்தை அயன்படுத்தியதாலும் மின் கட்டணம் அதிகரித்து இருப்பதாகவும் விளக்கமளித்தார்.

ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதம் முதல் மின்சார ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்யாததால், ஒவ்வொரு வீடுகளிலும் அவர்கள் பயன்படுத்திய மின்சார யூனிட்டின் அளவு யாருக்கும் தெரியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

இது போன்ற சூழலில், மின்சார சட்ட விதிகளின் அடிப்படையில், முந்தைய மாத கட்டணத்தையே முதல் மாதம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், அடுத்த மின் கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியோடு முந்தைய கட்டண தொகையின் அடிப்படையில் நிர்ணயித்ததாகவும் தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அரசின் விளக்கத்தை ஏற்று, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு பகுதி.

அந்த தீர்ப்பில், அரசு தரப்பு வாதத்தின் படி, 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்திய நுகர்வோர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும், முதல் 100 யூனிட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதும் தெளிவாகிறது.

நுகர்வோர் முதல் 100 யூனிட்க்கான கட்டண சலுகையை பெற 4 மாதங்களுக்கான மின் கணக்கீட்டை இரண்டு இரு மாதங்களுக்கு என பிரிப்பது அவசியமாகிறது.
இல்லாவிட்டால் அந்த முதல் 100 யூனிட்டுக்கான கட்டணம் சலுகையை பெற இயலாது என்பதும் தெரிய வருகிறது.

மின் கட்டணத்தை நிர்ணயிக்க வகை செய்யும் சட்டப் பிரிவின் அடிப்படையில், மின் கணக்கீடு செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. நியாயமான முறையிலேயே மின் கணக்கீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மின் நுகர்வு பயன்பாடு அதிகமாக தான் இருக்கும் என்பதை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு கோடியே 75 லட்சம் மின் நுகர்வோர் உள்ளநிலையில் மனுதாரர் கூறும்படி கணக்கீடு செய்ய இயலாது. கரோனா காரணமாக வீடுகளுக்கு சென்று மீன் அளவீட்டை கணக்கிடாமல் போனதற்கு வாடிக்கையாளர்கள் காரணம் அல்ல என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது..

கரோனா ஊரடங்கை சமாளிக்க அரசுக்கு நிதி தேவை உள்ள நிலையில், மக்கள் நிலைமையை புரிந்து கொண்டு, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியையும், கட்டணங்களையும் முறையாக செலுத்த வேண்டும். மின் கணக்கீட்டை பொறுத்தவரை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்ட நடைமுறையில் குற்றம் கண்டுபிடிக்க இயலாது.

மின்சார வாரியத்தின் உத்தரவு தன்னிச்சையானது என்று கூற எந்த காரணங்களும் இல்லை. போதுமான விளக்கங்கள் மின்வாரியம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களும் பயனடைந்துள்ளனர்.

ஒருவேளை மின் கணக்கீடு செய்ததில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால், வாடிக்கையாளர்கள் சட்டப்படி அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x