Published : 15 Jul 2020 07:16 AM
Last Updated : 15 Jul 2020 07:16 AM

மூச்சுத் திணறல், நெஞ்சுவலி ஏற்பட்டு நடக்கவே முடியாமல் அவதி: சித்த மருத்துவத்தால் ஒரே வாரத்தில் கரோனாவில் இருந்து பூரண குணம்- காஞ்சிபுரம் பெண் மருத்துவரின் நெகிழ்ச்சியான நேர்காணல்

கரோனா வைரஸ் தொற்றால் கடுமையான மூச்சுத் திணறல் மற்றும்ஆக்சிஜன் அளவு குறைவால் பாதிக்கப்பட்ட பெண் பல் மருத்துவர், சித்த மருத்துவ சிகிச்சையால் ஒரே வாரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவர் தனது அனுபவத்தை நெகிழ்ச்சியோடு நம்முடன் பகிர்கிறார்...

என் பெயர் சந்தியா ஜி.ராம். 25 வயது. பல் மருத்துவர். காஞ்சிபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறேன். ஜூன் 24-ம் தேதி காய்ச்சல்ஏற்பட்டது. லேசான நெஞ்சுவலியுடன், மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது. தனியார் மருத்துவரிடம் சென்றபோது, ‘‘சாதாரண வைரஸ் காய்ச்சல்தான்’’ என்று கூறி ஊசி போட்டு மாத்திரை கொடுத்தார். திரும்பத் திரும்ப காய்ச்சல் வந்து,சில நாட்களில் மூச்சுத் திணறல் அதிகமானது. நடக்கவே முடியவில்லை. மீண்டும் மருத்துவரிடம் சென்றபோது, கரோனாவாக இருக்கலாம் என்றார்.

உடனே காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றோம். அங்குஎனக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு சிறிது நேரம்ஆக்சிஜன் வைத்தும், 91 என்றஅளவிலேயே இருந்தது. மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்ட நிலையில், ஜெனரேட்டரும் இல்லை. நோயாளிகளும் அதிகம் இருந்தனர். அதனால், ‘‘மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டால், வாருங்கள்’’ என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

எனக்கு கரோனா இருப்பது கடந்த 6-ம் தேதி உறுதியானது. இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் சித்தா சிகிச்சை மையம் செயல்படுவதாக கேள்விப்பட்டு, அன்று இரவே அங்கு சென்றேன். என் உடல்நிலை குறித்து விசாரித்தசித்த மருத்துவர் வீரபாபு அப்போதேகசாயம், மாத்திரை கொடுத்தார். ஒரு மணி நேரத்திலேயே ஓரளவுதெம்பு வந்ததுபோல இருந்தது.2-வது மாடியில் படுக்கை கொடுத்தனர். நானே நடந்து சென்றேன். ஆனால், ஆக்சிஜன் அளவு ஏறவில்லை. மூச்சுத் திணறல், காய்ச்சலும் குறையவில்லை.

அடுத்த ஒருநாளில் எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக சரியாகின. நன்றாக நடக்கத் தொடங்கினேன். தொடர்ந்து கசாயங்கள், சித்தா மாத்திரைகள், சத்துள்ள உணவு கொடுத்தனர். ஆக்சிஜன் வைக்கவில்லை. முகக் கவசம் அணிவிக்கவில்லை. மருத்துவர் உள்ளிட்டோரும் பாதுகாப்பு கவச உடை அணியவில்லை. எங்களை தொட்டுப் பார்த்துதான் சிகிச்சை அளித்தனர். 3 நாட்களில் காய்ச்சல், மூச்சுத் திணறல் சரியானது.

ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு, பூரண குணமடைந்து இன்று (நேற்று) வீடு திரும்பியுள்ளேன். இப்போது ஆக்சிஜன் அளவு 99 உள்ளது. நான் சேர்ந்த 2 நாட்களில் என் அம்மாவும் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதே மையத்துக்கு வந்தார். அவரும் குணமடைந்து ஒன்றாக வீடு திரும்பி உள்ளோம். சர்க்கரை நோய், 3 மாதம் முன்பு கருக் கலைப்பு நடந்தது ஆகிய பாதிப்புகள் இருந்தாலும் சித்த மருத்துவத்தால் ஒரே வாரத்தில் நான் குணமடைந்ததில் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. நடைபயிற்சி சென்றபோது எனக்கு கரோனா தொற்றி இருக்கலாம். தயவுசெய்து காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலிகை ரசமே மருந்து

சித்த மருத்துவர் வீரபாபு, தமிழக அரசுடன்இணைந்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியை கரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார். அங்கு 400 படுக்கைகள் உள்ளன. சித்த மருந்துகளான கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம், மூலிகை தேநீர், தூதுவளை ரசம், கற்பூரவல்லி ரசம், ஆடாதொடை ரசம், மணத்தக்காளி ரசம், மூலிகை உணவுகள், நவதானிய பயறுகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு சித்த மருத்துவ சிகிச்சையால் இதுவரை 1,050 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x