Published : 14 Jul 2020 10:06 PM
Last Updated : 14 Jul 2020 10:06 PM

போதைப்பொருள் கடத்தல் மண்டலமாக இந்தியா பயன்படுத்தப்படுகிறதா? கடத்தலை வேரறுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் மண்டலமாக நம் நாடு பயன்படுத்தப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், போதைப்பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான வேலூர் மாவட்டம் பொம்மிகுப்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் கைதான நிலையில், அவரைக் குண்டர் சட்டத்தில் அடைத்து 2019 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சித்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் இன்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரதாப் குமார், இந்த வழக்கில் தொடர்புடைய முதல் மற்றும் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சகோதரர்கள் எனவும், அவர்கள் குடும்பத்தினருக்குச் சொந்தமான லாரியைக் கொண்டு சரக்குகளைக் கையாளும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பது மற்றும் அதனால் சமூகம் சீரழிவதை முக்கிய விஷயமாகக் கருதுவதாகத் தெரிவித்ததுடன், வழக்கில் மத்திய, மாநில அளவிலான போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகளைத் தாமாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்த்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், தமிழக உள்துறைச் செயலாளரும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவுகளும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

கேள்விகள்:

"போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன?

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் இயல்பு, அளவு என்ன? அவை எப்படி அழிக்கப்படுகிறது?

வெளிநாட்டவருக்குத் தொடர்பு உள்ளதா?

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தடுப்புக் காவல் சட்டத்தில் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? அந்த வழக்குகளிலிருந்து எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்? எந்தக் காரணத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்?

இதுபோன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் என்ன பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள்? போதைப்பொருள் நுகர்வோரால் என்ன குற்றங்கள் நடக்கின்றன? பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க மையங்கள் ஏதும் உள்ளதா?

போதைப்பொருள் கடத்தலுக்கு வேலையில்லாத் திண்டாட்டம்தான் காரணமா? மாணவர்களும், இளைஞர்களும் இந்தக் கடத்தலில் ஈடுபடுகிறார்களா?

போதைப்பொருள் கடத்தல் மையமாக இந்திய நாடு பயன்படுத்தப்படுகிறதா?

கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் எங்கு விளைவிக்கப்படுகின்றன? அடர்ந்த காடுகளுக்கு உள்ளேயும் கண்காணிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் காவல்துறையிடம் உள்ள ஆளில்லா கேமரா மூலம் கண்காணிக்கவோ, அவற்றை அழிக்கவோ ஏன் முடியவில்லை?

போதைப்பொருள் கடத்தலில் சட்டவிரோத பணம் சம்பாதிப்பதைத் தவிர்த்து வேறு காரணங்கள் உள்ளதா?

போதைப்பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன?

கடந்த 10 ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தலில் எவ்வளவு தொகை ஈடுபடுத்தப்பட்டுள்ளது?

போதைப்பொருள் தொடர்புடைய வழக்குகள் மற்றும் குற்றங்களைக் கையாள ஏன் தனிப்பிரிவை உருவாக்கக் கூடாது?"

இத்தகைய கேள்விகளை எழுப்பி, 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x