Published : 14 Jul 2020 09:47 PM
Last Updated : 14 Jul 2020 09:47 PM

தமிழகத்தில் பல்கலை, கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வழக்கமான வகுப்புகள், தேர்வுகள் போன்ற கல்வி சார்ந்த நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.

இதையடுத்துத் தேர்வு மற்றும் கல்வியாண்டு தொடங்குவது குறித்து பரிந்துரைகள் வழங்க, பேராசிரியர் குஹத் தலைமையில் நிபுணர் குழு ஒன்றைப் பல்கலைக்கழக மானியக் குழு நியமித்தது. இந்தக் குழு, ஜூலை மாதம் தேர்வுகளை நடத்தலாம் என கடந்த ஏப்ரலில் சிபாரிசு செய்தது.

ஆனால், தொற்று தீவிரம் காரணமாக, தேர்வு நடத்துவது குறித்து மறு ஆய்வு செய்து பரிந்துரை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக்கொண்டது.

அதன் அடிப்படையில் அந்தக் குழு சமர்ப்பித்த திருத்தியமைக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இறுதிப் பருவத் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்தி முடிக்க, பல்கலைக்கழக மானியக் குழு கடந்த ஜூலை 6-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அமல்படுத்த தமிழக அரசுக்குத் தடை விதிக்கக் கோரியும், அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், கோவையைச் சேர்ந்த முதுகலை மாணவர் அம்ஜத் அலிகான், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொது போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச அரசுகளையும் கலந்தாலோசிக்காமல் இந்த அறிவிப்பைப் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக கல்லூரிகள் செயல்படாத நிலையில், வகுப்புகள் நடத்தப்படாத நிலையில், தேர்வு நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது கல்லூரிகள், கரோனா பரிசோதனை மையங்களாகவும், தனிமைப்படுத்தும் மையங்களாகவும் மாற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், அங்கு தேர்வு நடத்துவது, மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x