Last Updated : 14 Jul, 2020 06:49 PM

 

Published : 14 Jul 2020 06:49 PM
Last Updated : 14 Jul 2020 06:49 PM

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் பாரசிட்டமால் விற்கக்கூடாது என உத்தரவிடவில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழகத்தில் மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பாரசிட்டமால் மருந்து, மாத்திரை விற்கக்கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த ஜோயல் சுகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் விதி 123-ல் கே அட்டவணையின் வரும் பொருட்களை வீட்டு உபயோகத்திற்காக வாங்கி வைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அந்த கே அட்டவணையில் பாரசிட்டமால் மாத்திரை உள்ளது.

எனவே மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தலாம். பாராசிட்டமால் வலி நிவாரணியாகவும், அதிகபட்ச காய்ச்சலை குறைக்கவும் பயன்படுகிறது.

கரோனா காலத்தில் பலர் கரோனா தொற்று இல்லாத காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு கரோனா தொற்று அச்சம் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதில்லை. இவர்கள் பாரசிட்டமால் மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தி காய்ச்சலில் இருந்து மீள்கின்றனர்.

இந்நிலையில் தற்போது மருந்தகங்களில் பாரசிட்டமால் மருந்து, மாத்திரை கேட்டால் தர மறுக்கின்றனர். காரணம் கேட்டபோது பாரசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டிருப்பதாக மருந்தக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் கரோனா தொற்று அல்லாத காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சட்டப்படி வீடுகளில் இருப்பு வைக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் மருந்தான பாரசிட்டமாலை விற்கக்கூடாது என உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம்.

எனவே பாரசிட்டமால் மருந்து, மாத்திரைகளை அனைத்து மருந்தகங்களில் வழங்கவும், தட்டுப்பாடு இல்லாமல் பாரசிட்டமால் கிடைப்தை உறுதி செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி விற்கக்கூடாது என அரசு எந்த உத்தரவும்பிறப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x