ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்: தமிழக அரசு விரிவாக பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியது தொடர்பாக தமிழக அரசு விரிவாக பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகியும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், ஊரடங்கின் காரணமாக தமிழக அரசு குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்குத் தலா ரூ.1,000 வழங்கியுள்ளது. ஒரு குடும்பத்தைச் சமாளிக்க 1,000 ரூபாய் போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை, அமைப்புசாரா தொழிலாளர்கள் பலருக்கு இன்னும் போய்ச் சேரவில்லை என்றும், கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருவிழாவின்போது கூட 1,000 ரூபாய் வழங்கப்பட்டது என்று மனுவில் அவர் சுட்டிக்காட்டினார். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜப்பான் 20 சதவீதமும். அமெரிக்கா 15 சதவீதமும் நிவாரணமாக வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஆனால், இந்தியாவில், ஜிடிபியில் ஒரு சதவீதத்தை மட்டுமே வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஊரடங்கு நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய வேளையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு இன்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நல வாரியங்களின் மூலம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் குறித்து விரிவாக பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in