Published : 14 Jul 2020 01:34 PM
Last Updated : 14 Jul 2020 01:34 PM

சென்னையில் மரங்களில் விளம்பரப் பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

சென்னையில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பரப் பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சாலையோரங்களில் வளர்ந்துள்ள மரங்களின் மீது ஆணி அடித்து பல தனியார் நிறுவனங்கள் விளம்பரப் பலகைகள் வைக்கின்றன. மேலும், மின்சார வயர்கள், டியூப் லைட், சீரியல் லைட் போன்றவையும் மரங்கள் மீது வைக்கப்படுகின்றன. இதுபோன்று சட்டவிரோதமாக வைக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் மின்சார சாதனங்களை அகற்ற உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் ஜெயலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜூலை 14) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மரங்கள் மீது இதுபோன்று விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவதால், மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இது தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு மாநகராட்சியிடம் கொடுத்த மனு மீது இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சாலையோர மரங்களைச் சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், சென்னையில் மரங்களைச் சேதப்படுத்திய தனியார் நிறுவனங்கள் குறித்த விவரங்களை மனுதாரர் 6 வாரத்திற்குள் மாநகராட்சியிடம் வழங்க வேண்டும் என்றும், அடுத்த 8 வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x