Published : 09 Sep 2015 08:34 AM
Last Updated : 09 Sep 2015 08:34 AM

உயர் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.வாசுகி ஓய்வு: நீதிபதிகள் காலியிடங்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.வாசுகி நேற்று ஓய்வுபெற்றார். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆனது. நீதிபதிகள் காலியிடங்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.வாசுகி நேற்று ஓய்வுபெற்றதையடுத்து அவருக்கு பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி பாராட்டுரை வழங்கினார்.

அப்போது அவர் கூறும்போது, “ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த நீதிபதி கே.பி.கே.வாசுகி, 1979-ல் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார். 1986-ல் மாவட்ட நீதிபதியானார். சேலம், கோவை உட்பட பல்வேறு இடங்களில் நீதிபதியாகப் பணியாற்றிய நீதிபதி கே.பி.கே. வாசுகி, 2010-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 2012-ல் நிரந்தர நீதிபதியானார். அவர் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்” என்றார். அதையடுத்து நீதிபதி கே.பி.கே.வாசுகி ஏற்புரையாற்றினார்.

இந்த விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் நீதிபதி வாசுகியின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x