Published : 14 Jul 2020 08:09 AM
Last Updated : 14 Jul 2020 08:09 AM

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் போலீஸார் மீது கொலை வழக்கு பதிந்தது: சிபிஐ ஆய்வாளர் உட்பட 5 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் தர் உட்பட 10 பேர் மீது சிபிஐ கொலை வழக்குப் பதிவு செய்தது. ஸ்ரீதர் உட்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிந்தனர். பின்னர் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், முதல் நிலைக் காவலர் முத்துராஜா ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் சாமிதுரை, முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்தனர். அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர்.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால் வழக்கு ஆவணங்கள், தாக்குதலுக்கு போலீஸார் பயன்படுத்திய லத்தி, ரத்தக்கறை படிந்த ஆடைகள் உள்ளிட்ட தடயங்கள் அனைத்தும் மதுரை தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

சிபிஐ அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்திய நிலையில் ஸ்ரீதர் உட்பட 10 பேர் மீது கொலை வழக்குப் பதிந்தனர்.

இபிகோ 302 (கொலை), 341 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்), 201 (தடயங்களை அழித்தல்) மற்றும் 109 (தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப் பதிந்தது.

முதல் தகவல் அறிக்கையில் சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் முதல் குற்றவாளியாகவும், ஆய்வாளர் ஸ்ரீதர் 4-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றொரு சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் 2-வது, தலைமைக் காவலர் முருகன் 3-வது, முதல் நிலைக் காவலர் முத்துராஜா 5-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சிபிஐ ஏடிஎஸ்பி வி.கே.சுக்லா நேற்று மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஹேமானந்த்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதி விசாரணையை செவ்வாய்க்கிழமை (இன்றைக்கு) ஒத்திவைத்தார். முதலில் கைதான ஸ்ரீதர் உட்பட 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதி பதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x