Published : 14 Jul 2020 06:54 AM
Last Updated : 14 Jul 2020 06:54 AM

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு: முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை

வெளிநாடுகளை சேர்ந்த 5 லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். முதலீடுகளை எளிதாக ஈர்க்க, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறப்பு பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல், உலக பொருளாதார சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம்பெயர முடிவெடுத்துள்ளன. இந்நிலையில், உலக முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், பெடக்ஸ் நிறுவன தலைவர் பெரட்ரிக் டபிள்யூ ஸ்மித், யுபிஎஸ் நிறுவன முதன்மை செயல் அலுவலர் டேவிட் பி அப்னே ஆகிய 2 முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவன தலைவர்களுக்கும், சவுதி அரெம்கோ நிறுவன தலைவர் அமின் எச் நாசர், எக்ஸன் மொபில் கார்ப்பரேஷன் நிறுவன தலைவர் டாரன் உட்ஸ், சிபிசி கார்ப்பரேஷன் நிறுவன தலைவர் ஜியா ருயே ஊஆகிய 3 முன்னணி பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்கள், சிறப்பான தொழில் சூழல்களை குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை அளிக்கும் என்றும் தேவைக்கேற்ப ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் முதல்வர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x