Published : 28 May 2014 09:52 AM
Last Updated : 28 May 2014 09:52 AM

அரசுப் பொறுப்புகளுக்கு காய் நகர்த்தும் பாஜகவினர்: பதவிகள் பெற தீவிரம்

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளதையடுத்து பல்வேறு துறைகளின்கீழ் உள்ள நிறுவனங்கள், அமைப்புகளில் பொறுப்புக்களை பெறுவதில் பாஜகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த திங்கள்கிழமை பதவியேற்றது. பிரதமருடன் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட 23 கேபினட் அமைச்சர்களும், பொன்.ராதாகிருஷ்ணன், வி.கே.சிங் உள்ளிட்ட 22 இணை அமைச்சரகளும் பதவியேற்றனர்.

இந்நிலையில், மந்திரி பதவி கிடைக்காத பாஜக எம்.பி.க்களும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அரசுத்துறை நிறுவனங்கள், அமைப்புகளில் பதவிகளைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, தொலைத் தொடர்பு, ஜவுளி, கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து, வேளாண்மை, மனிதவள மேம்பாடு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் அதிக அளவில் பதவிகள் உள்ளன. அவற்றை பிடிக்கவும், அதிக அளவில் போட்டி உள்ளது.

கட்சியில் செல்வாக்குமிக்க தலைவர்களைப் பிடித்து எப்படியாவது பதவி வாங்கிவிட வேண்டும் என முனைப்புகாட்டி வருகின்றனர். தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் என பலரும் பதவிகளை பெறுவதற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

எந்தத் துறைகளில் என்னென்ன பதவிகள் உள்ளன என்பது குறித்து நண்பர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசுத் துறையினர் என பலரிடமும் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x