Last Updated : 13 Jul, 2020 09:33 PM

 

Published : 13 Jul 2020 09:33 PM
Last Updated : 13 Jul 2020 09:33 PM

சமூக இடைவெளியைப் பின்பற்றாத உணவகங்கள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை

சமூக இடைவெளியைப் பின்பற்றாத உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொங்கு நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மே 31-ல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில் உணவகங்களில் 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கி அரசாரணை பிறப்பிக்கப்பட்டது. அதில் உணவகங்களில் ஏசி பயன்படுத்தக்கூடாது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலான உணவகங்களில் பின்பற்றப்படுவதில்லை. இதனால் கரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் உள்ளது. எனவே உணவகங்களில் 50 சதவீதம் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உணவகங்களில் 50 சதவீதம் பேர் சமூக இடைவெளியை பின்பற்றி சாப்பிடுவது எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், தினமும் அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு செய்கின்றனர். அரசின் உத்தரவு கடைபிடிக்காத உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்று அரசாணையில் கூறப்பட்டுள்ளவாறு உணவகங்களில் சமூக இடைவெளியை பின்பற்றப்படுவது உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் அறிக்கையை ஆகஸ்ட் 4-ல் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x