Published : 13 Jul 2020 06:50 PM
Last Updated : 13 Jul 2020 06:50 PM

பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டும் பணியின்போது விபத்து: ஆழ்துளை குழியில் சிக்கி முத்துக்குளிக்கும் தொழிலாளி உயிரிழப்பு

பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகளுக்காக நடுக்கடலில் தோண்டப்பட்ட ஆழ்துளை குழியில் பணியிலிருந்தபோது முத்துகுளிக்கும் மீனவத் தொழிலாளி சகாய ஊர்சோன் என்பவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

ராமேசுவரம் அருகே பாம்பனில் பாக்ஜலசந்தி கடல் மேலே புதிய ரயில் பாலம் கட்டுவதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 1.3.2019 அன்று பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பூமி பூஜையுடன பணிகள் துவங்கப்பட்டு தொடர்ந்து கடலில் தூண்கள் அமைப்பதற்காக ஆள்துளையிடும் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக கடலுக்கு அடியில் ஆழ்துளையிடப்பட்ட குழிகளில் தூண்கள் அமைப்பதற்காக இரும்பு உருளைகள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடலுக்கு அடியில் மூழ்கி இந்தப் பணியைச் செய்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடலில் முத்துக்குளிக்கும் மீனவத் தொழிலாளிகள் வரவழைக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை கடலில் ராட்சத ஆழ்துளையிடும் இயந்திரத்தின் பாகம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட 100 அடி ஆழமுள்ள குழிக்குள் சிக்கியது. இதனை எடுப்பதற்காக குழிக்குள் ஆக்சிஜன் வசதியுடன் முத்துகுளிக்கும் மீனவர்களான சகாயஊர்சோன் (53) சத்தியநாதன், அமர் ஆகிய மூவரும் ஈடுபட்டிருந்தனர்.

இதில் சத்தியநாதன், அமர் ஆகிய இருவர் மட்டும் 15 நிமிடங்களில் மேலே வந்துள்ளனர். வெகுநேரமாகியும் சகாயஊர்சோன் மேலே வரவில்லை. தொடர்ந்து குழியிலிருந்து மூச்சுத் திணறி வாயில் ரத்தம் படிந்த காயத்துடன் மயக்கநிலையில் சக பணியாளர்களால் மீட்டனர்.

உடனே அவர் அங்கிருந்து பாம்பன் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்த பின் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

உடல் பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்டபம் மெரைன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x