Last Updated : 13 Jul, 2020 06:23 PM

 

Published : 13 Jul 2020 06:23 PM
Last Updated : 13 Jul 2020 06:23 PM

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உட்பட 5 பேரை காவலில் எடுக்க அனுமதி கோரி சிபிஐ மனு தாக்கல்: நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் என 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ தாக்கல் செய்துள்ள நிலையில், 5 பேரையும் நாளை நேரில் ஆஜர்படுத்த மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கின் போது கூடுதல் நேரம் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகக் கூறி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், முதல் நிலைக் காவர் முத்துராஜா ஆகியோரை முதலில் கைது செய்தனர்.

பின்னர் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் சாமிதுரை, முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ ஏடிஎஸ்பி வி.கே.சுக்லா தலைமையில் அதிகாரிகள் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும், தந்தை, மகனைத் தாக்க போலீஸார் பயன்படுத்திய லத்தி, ரத்தக்கறை படிந்த ஆடைகள் உள்ளிட்ட தடயங்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இருந்து மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சிபிஐ ஏடிஎஸ்பி வி.கே.சுக்லா இன்று மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஹேமானந்த்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

விசாரணையின் போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல் நிலை காவர் முத்துராஜா ஆகியோரை நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x