Published : 13 Jul 2020 06:10 PM
Last Updated : 13 Jul 2020 06:10 PM

ஜூலை 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பேருந்துப் போக்குவரத்துக்குத் தடை: தமிழக அரசு உத்தரவு

மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, மாவட்ட ஆட்சியர்களுடன் சமீபத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பெருகி வரும் நிலையில் தமிழக அரசு மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஊரடங்கில் சில தளர்வுகளை முதல்வர் பழனிசாமி அறிவித்தார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக மக்கள் பேருந்துகளில் சமூக இடைவெளியின்றிப் பயணம் மேற்கொண்டனர். மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து பொதுப் போக்குவரத்தில் கட்டுப்பாடு கொண்டு வர முடிவெடுக்கப்பட்டது.அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் பேருந்துப் போக்குரவத்துக்குத் தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு:

“கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 24.3.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வரும் நிலையில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொதுப் பேருந்துப் போக்குவரத்துச் சேவை 1.7.2020 முதல் 15.7.2020 வரை நிறுத்தப்பட்டது.

தற்போது, தமிழ்நாட்டில், கரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன் 31.7.2020 முடிய தனியார் மற்றும் அரசு பொதுப் பேருந்துப் போக்குவரத்துச் சேவை இயக்கப்படாது. தமிழ்நாடு அரசின் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x