Last Updated : 13 Jul, 2020 04:06 PM

 

Published : 13 Jul 2020 04:06 PM
Last Updated : 13 Jul 2020 04:06 PM

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 யூனிட்டுகள் நிறுத்தம்: 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 840 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் மூலம் சராசரியாக 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த அனல்மின் நிலையத்தின் 5-வது யூனிட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட பழுது சரி செய்யப்படாததால், அந்த யூனிட்டில் தொடர்ந்து மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 4-வது யூனிட் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக இம்மாதம் 3-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மற்ற மூன்று யூனிட்டுகளும் கடந்த வெள்ளிக்கிழமை வரை முழுமையாக இயங்கி வந்தன. இந்த நிலையில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு, பல இடங்களில் முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் மின் தேவை குறைந்ததால் அரசின் அறிவுறுத்தலின் பேரில் 1 மற்றும் 3-வது யூனிட்டுகளில் அடுத்தடுத்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டன.

2-வது யூனிட் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், அந்த யூனிட்டில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால், அந்த யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஒரே நேரத்தில் 5 யூனிட்டுகளும் செயல்படாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுத்து 3-வது யூனிட்டை உடனடியாக இயக்கினர். இந்த யூனிட்டில் இன்று காலை 11 மணி முதல் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

இன்று மாலை நிலவரப்படி 1, 2, 4, 5 ஆகிய 4 யூனிட்டுகள் இயங்கவில்லை. இதனால் 840 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 3-வது அலகு மட்டும் செயல்பட்டு வந்தது.

இது குறித்து அனல்மின் நிலைய அதிகாரிகள் கூறும்போது, 4-வது யூனிட் ஆண்டு பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. 5-வது யூனிட்டுக்கு தேவையான உதிரி பாகம் ஒன்று வட இந்தியாவில் இருந்து வரவேண்டியுள்ளது. ஊரடங்கு காரணமாக அந்த பாகம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த உதிரி பாகத்தை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் 15 நாளில் அந்த யூனிட் மீண்டும் செயல்பட தொடங்கும். மற்ற யூனிட்டுகள் மின் தேவை குறைவு காரணமாக அரசின் அறிவுறுத்தலின் பேரிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. அரசு கேட்டு கொண்டால் உடனடியாக அந்த யூனிட்டுகள் மீண்டும் இயக்கப்படும் என்றனர் அவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x