Published : 13 Jul 2020 03:51 PM
Last Updated : 13 Jul 2020 03:51 PM

மருத்துவ படிப்பில் தமிழகம் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கும் இடங்களில் 50% ஒதுக்கீடு கோரும் வழக்கு; உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

மருத்துவ படிப்பில் தமிழகத்தால் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% இடங்களை தமிழகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, தமிழக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தால் மத்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ இடங்களில், தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை கடைபிடிக்காமல், கடந்த ஏப்ரல் 4-ம் தேதி நீட் (PG NEET)அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியலின்படி மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்த இடைக்கால தடை விதிக்கக் கோரி மருத்துவர் டி.ஜி.பாபு தாக்கல் செய்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மருத்துவ படிப்பில் தமிழகத்தால் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% இடங்களை தமிழகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்கக்கோரிய மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கும் வகையில் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்ததார். இந்த மனுக்கள் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மருத்துவர் டி.ஜி.பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “சலோனி குமாரி வழக்கில் கடந்த 2016-ல் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்து விட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மத்திய அரசு இந்த விவகாரத்தை நேர்மையுடன் அணுகவில்லை என்பது தெரிகிறது, இந்த அணுகுமுறையால் ஆயிரக்கணக்கான ஓபிசி மாணவர்கள் மருத்துவர் ஆவது சட்டவிரோதமாக தடுக்கப்பட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டினார்..

இதனையடுத்து தொல்.திருமாவளவன் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வேண்டும் எனக்கோரியுள்ள தங்கள் தரப்பு மனுவை, சலோனி குமாரி வழக்குடன் இணைக்க வேண்டும், மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும்” எனக் கோரினார்.

அப்போது நீதிபதிகள், ஏற்கெனவே ஓபிசி இடஒதுக்கீடு முறை உள்ளது, ஆனால் அது முறையாக மருத்துவ கல்லூரிகளில் அமல்படுத்தபடுவதில்லை என்பதே சலோனி குமாரி வழக்கு, எனவே திருமாவளவன் தாக்கல் செய்துள்ள மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள், மருத்துவ படிப்பில் தமிழகத்தால் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% இடங்களை தமிழகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டனர்.

ஏனெனில் உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு கோரி நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்கிற்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களும் தொடர்பில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்”.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x