சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவன விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழக அரசு அறிவிப்பு
சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவன விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சமூக நலத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
'' 2020-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது பெண்களின் முன்னேற்றத்திற்குச் சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளன.
குறைந்பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து, மகளிர் நலனுக்குத் தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்ன தகுதி?
* நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
* தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
* விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையுடன் வரப் பெற வேண்டும்.
* மாநில அளவிலான உயர் மட்டக்குழு விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, விருதுக்குத் தகுதியான தனிநபர் மற்றும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு அளவு புகைப்படத்துடன் பெறப்பட வேண்டும்.
எனவே, அனைத்து மாவட்டங்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்குச் சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட மாவட்டச் சமூக நல அலுவலர் அவர்களை நேரில் அணுகி வருகின்ற ஜூலை 20-ம் தேதிக்குள் கருத்துருக்கள் சமர்ப்பிக்க வேண்டும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
