Published : 13 Jul 2020 01:06 PM
Last Updated : 13 Jul 2020 01:06 PM

கரோனா தடுப்புப் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடைகோரும் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை

ஆசிரியர்கள் இயற்கையாகவே தலைமைப் பண்பு கொண்டவர்கள். அவர்களிடம் சேவையை எதிர்பார்க்கிறோம். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தும்போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க, தொற்று பாதித்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவது என முடிவு செய்த சென்னை மாநகராட்சி, உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், “கரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வீட்டுத் தனிமைப்படுத்தல் திட்டங்களை அமல்படுத்தவும், ஒருங்கிணைப்பு வழங்கவும் 200 ஆசிரியைகளை ஈடுபடுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே இப்பணியில் அனுபவமில்லாத ஆசிரியை ஒருவர் ஈடுபட்டு கரோனா தொற்றுக்கு ஆளாகி அவரது குடும்பத்தினர் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே கரோனா தடுப்புப் பணிகளுக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்த மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில், “ஆசிரியர்கள் களப்பணிக்கு அனுப்பப்படுவது இல்லை. தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் அவர்களைக் கண்காணிக்கும் பணிதான் மேற்கொள்கிறோம். ஆசிரியர்கள்அலுவலகரீதியான வேலைதான் செய்வார்கள். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஆசிரியர்கள் என்பவர்கள் இயற்கையாகவே தலைமைப் பண்பு கொண்டவர்கள். இதுபோன்ற பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை நீதிமன்றம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.

இதுபோன்ற பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x