Published : 13 Jul 2020 10:15 AM
Last Updated : 13 Jul 2020 10:15 AM

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரான் மீனவர்களையும் மீட்டு வருக- வைகோ அறிக்கை

சென்னை

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும் ஈரான் மீனவர்களையும் மீட்டுக் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்களன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டைச் சேர்ந்த 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள், கிர்கிஸ்தான் நாட்டில், மருத்துவக் கல்வி பயின்று வருகின்றார்கள். கொரோனா தொற்று காரணமாக, விடுதி அறைகளில் தங்கி இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் எனவும், பல்கலைக்கழங்கள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளன.

எனவே, தொற்று அச்சத்தில் இருக்கின்றனர். இந்தியத் தூதரகத்தில் தொடர்ந்து விண்ணப்பித்தனர். அதன்பேரில், தமிழ்நாட்டுக்கு இரண்டு வான் ஊர்திகள் ஏற்பாடு செய்தார்கள். 324 மாணவர்கள், திருச்சிக்கு வந்து சேர்ந்தனர். எஞ்சியவர்களையும் மீட்டுக்கொண்டு வருவதற்கு, வந்தே பாரத் திட்டத்தின் கீழ், உடனடியாக வான் ஊர்திகளை இயக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேபோல், ஈரான் நாட்டில் சிக்கி இருந்த 720 மீனவர்களை மீட்டுக்கொண்டு வர வேண்டும் என, நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போதே வலியுறுத்தினேன். அமைச்சரிடம் வலியுறுத்தினேன். தொடர்ந்து அறிக்கைகள் கொடுத்து வந்தேன். அவர்களுள் 673 பேர், கப்பல் மூலமாக தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்து விட்டனர்.

கப்பலில் இடம் இல்லை என்பதால், 47 மீனவர்கள் அங்கேயே விடப்பட்டனர். கப்பலை நம்பி, நிறுவனத்தை விட்டு வெளியே வந்து விட்டனர். எனவே, அவர்களை மீண்டும் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள நிறுவனம் மறுத்து விட்டது. அதனால், உணவுக்கும், தங்கும் இடத்திற்கும் வழி இல்லாமல் திண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள். இனி கப்பல் ஏற்பாடு செய்ய வழி இல்லை. எனவே, விமானத்தில் ஊருக்குச் செல்லுங்கள் என்று சொல்கின்றார்கள். விமானக் கட்டணம் செலுத்த அவர்களிடம் பணம் இல்லை. எனவே, அவர்களை மீட்டுக் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x