

தீவிர காய்ச்சல் தடுப்பு முகாம் மூலம் கரோனா பரவுவதை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கூறினார்.
மதுரை வடபழஞ்சியில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் கோவிட் கேர் மையம் அமைக்கப்பட உள்ளது. இதை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
மதுரையில் நடமாடும் காய்ச்சல் பரிசோதனை முகாம் மூலம் பரிசோதனை எண்ணிக்கை படிப் படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் அறிவுரைப்படி, அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் 1,400 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. பிற அரசு மருத்துவமனைகள் 450 படுக்கைகளும், தனியார் மருத்துவ மனைகள் 900 படுக்கைகளும் வழங்க முன்வந்துள்ளன. இத்துடன் 21 கோவிட் கேர் மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்போது கூடுதலாக மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் கேர் மையம் அமைய உள்ளது. தீவிர காய்ச்சல் தடுப்பு முகாம் நல்ல பலன் தந்துள்ளது. மதுரை நகர், கிராமங்களில் இந்த முகாம் தொடர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
இதன் மூலம் கரோனா பரவுவதை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என நம்புகிறோம் என்றார்.