Published : 13 Jul 2020 07:17 AM
Last Updated : 13 Jul 2020 07:17 AM

வருவாய் ஆய்வாளர் கரோனாவால் உயிரிழப்பு: ஆவடி மாநகராட்சி அலுவலகம் மூடல்

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சியின் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர்(51), சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவர், கடந்த 10-ம் தேதி மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

எனவே அவர் அன்று இரவு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

ஸ்ரீதர் உயிரிழந்த சம்பவம் மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றால் வருவாய் ஆய்வாளர் உயிரிழந்ததையடுத்து, ஆவடி மாநகராட்சி அலுவலகம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பூட்டப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலகம் வரும் ஜூலை 15-ம் தேதி திறக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x