

திமுக துப்பாக்கி கலாச்சாரத்தைநோக்கி சென்றுவிட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ளகரோனா தொடர்பான டெலி கவுன்சலிங் மையத்தை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:
ஊழலும் வன்முறை கலாச்சாரமும் திமுகவின் அடையாளம். இவற்றை திமுக அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளது. 2006-11 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் சொல்ல முடியாத அளவுக்கு நில அபகரிப்புகள் நடைபெற்றன.
பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, திமுகவினரால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டுஉரியவர்களிடம் ஒப்படைத்தது. ஏழை எளிய மக்களின் நிலங்களும் அதில் அடங்கும். அதற்காகவேமறைந்த முதல்வர் ஜெயலலிதாதனிச் சட்டத்தை கொண்டு வந்தார்.
கடந்த காலங்களில் இலவச பிரியாணிக்காக திமுகவினரால் கடைக்காரர்கள் தாக்கப்பட்டனர். அழகு நிலைய பெண்கள், தள்ளுவண்டி கடைக்காரர்களை அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இப்படியெல்லாம் செய்த திமுகவில், உச்சகட்டமாக துப்பாக்கி கலாச்சாரம் ஏற்பட்டுள்ளது.
இது ஒரு ஜனநாயக நாடு. ஒரு பிரச்சனை என்றால் சட்டப்படி, மாவட்ட நிர்வாகம் அல்லது நீதிமன்றத்தை அணுகி தீர்வுகாண வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர் என்றஅடிப்படையில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, உரிமம் இல்லாத துப்பாக்கியை கொண்டு சுடுவேன் என்றால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது.
மதுரையில் திமுக எம்எல்ஏ மூர்த்தி வீடு புகுந்து காலணியைக் கழற்றி சிலரை தாக்கியுள்ளார். ஆட்சியில் இல்லாத போதே இப்படி என்றால்,தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் என்னநிலைமை ஏற்படும். ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் துப்பாக்கி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.