சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு: எஸ்.ஐ. உள்ளிட்ட மேலும் 5 போலீஸார் பணியிடை நீக்கம்; சிபிஐ விசாரணை தீவிரம்

உயிரிழந்த பென்னிக்ஸ் - ஜெயராஜ்: கோப்புப்படம்
உயிரிழந்த பென்னிக்ஸ் - ஜெயராஜ்: கோப்புப்படம்
Updated on
1 min read

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணமடைந்த வழக்குத் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட மேலும் 5 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைக் கண்டித்து வியாபாரிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, கொலை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரையும் முதலில் கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் தொடர்புடைய சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று (ஜூலை 12) உத்தவிட்டுள்ளார்.

இதேபோல் நீதித்துறை நடுவரை அவதூறாகப் பேசிய காவலர் மகாராஜன் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 11 பேர் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிபிஐ விசாரணை தீவிரம்

இந்த நிலையில் இந்த வழக்கைத் தங்கள் கையில் எடுத்துள்ள சிபிஐ, விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து வந்துள்ள ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் இன்று சாத்தான்குளம் வந்து ஜெயராஜ் குடும்பத்தினரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து விசாரணையைத் தொடர்ந்து வரும் சிபிஐ அதிகாரிகள், இந்த வழக்குத் தொடர்பாக பெறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தனி அறையில் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் இன்று மாலை மீண்டும் சாத்தான்குளம் சென்று காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in