Published : 12 Jul 2020 08:12 AM
Last Updated : 12 Jul 2020 08:12 AM

சேலம் ஆட்சியர் அலுவலக வளாகம் மூடல்

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இரு ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் ஆட்சியர் அலுவலகம் முழுமையாக மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படம்: எஸ். குரு பிரசாத்

சேலம்/ஓசூர்/திருப்பூர்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் உள்ள பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் இரு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகம் மூடப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை (13-ம் தேதி) மீண்டும் அலுவலகம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வாணியம்பாடியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கரோனா உறுதியான நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

உடற்பயிற்சி கூடத்துக்கு சீல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தின்னூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞருக்கு புதுச்சேரியில் செய்யப்பட்ட பரிசோதனையில், கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த இளைஞர் தினமும் செல்லும், ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

காவல் நிலையம் மூடல்

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் 52 வயது ஆண் காவலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

வீரபாண்டி காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், அனைத்து போலீஸாருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x