Published : 12 Jul 2020 07:57 AM
Last Updated : 12 Jul 2020 07:57 AM

சுருக்குமடி வலைக்கான தடையை நீக்கக் கோரி மீனவர்கள் உண்ணாவிரதம், தர்ணா: நாகையில் போலீஸாருடன் தள்ளுமுள்ளு; கடலூரில் தீக்குளிக்க முயற்சி

சுருக்குமடி வலையைப் பயன் படுத்தி மீன் பிடித்ததாகக் கூறி மீன்களை பறிமுதல் செய்யும் மீன்வளத் துறை அதிகாரிகளைக் கண்டித்தும், சுருக்குமடி வலைக் கான தடையை நீக்கக் கோரியும் நாகை, பூம்புகார், கடலூர் சிதம்பரத்தில் மீனவர்கள் நேற்று உண்ணாவிரதம் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நாகை நம்பியார் நகர் மீனவர்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 30 விசைப்படகுகள், 400 பைபர் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

போலீஸாருடன் தள்ளுமுள்ளு

நாகை கோட்டாட்சியர் பழனிகுமார், கூடுதல் எஸ்.பி ரவீந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீனவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து, மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற மீனவர்களை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற் பட்டது. இதனால், நாகை- நாகூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

பின்னர் எஸ்.பி அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற மீனவர்களுடன், ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம், தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமார், எஸ்.பி செல்வநாகரத்தினம், மீன்வளத் துறை உதவி இயக்குநர் அமல்சேவியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், ஜூலை 15-க்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்து, மீனவர்களை அனுப்பிவைத்தனர்.

சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் கிராமத்தினர், பூம்புகார் பேருந்து நிலையம் அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பூம்புகார், தருமகுளம் பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர்.

இதேபோல, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரி கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, நல்லவாடு உட்பட சில மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் நேற்று கருப்புக் கொடியேந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தேவனாம்பட்டி னம் கடற்கரை பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மீனவப் பெண்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன்வளத் துறை அதிகாரிகளை கண்டித்து முழக் கங்களை எழுப்பிய மீனவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீஸார் தடுத்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீன்வளத் துறை அதிகாரியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், எஸ்பி ஸ்ரீஅபிநவ் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் கலைந்து செல்லுமாறு கூறினர்.

இதையடுத்து, ஊர் கூட்டம் நடத்தி அடுத்த கட்ட முடிவை எடுக்கலாம் என்று கூறிவிட்டு மீனவர்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல, சிதம்பரம் அருகே உள்ள எம்ஜிஆர் திட்டில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்புக் கொடி ஏந்தி நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அனை வரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x