ஆட்சியர், எஸ்.பி., முதன்மை நீதிபதி: மகளிர் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம்

எஸ்.பி. ரவளிபிரியா
எஸ்.பி. ரவளிபிரியா
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.பி.,யாக ரவளிபிரியா நியமிக்கப்பட்டதையடுத்து மாவட்டத்தில் உள்ள முதன்மைப் பொறுப்புக்கள் அனைத்திலும் மகளிர் இடம்பிடித்துள்ளனர்.

முழுவதும் மகளிரின் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம் முதன்முறையாக தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் ஆட்சியராக மு.விஜயலட்சுமி உள்ளார். மாவட்ட முதன்மை நீதிபதியாக ஜமுனா பணிபுரிந்துவருகிறார். மாவட்ட வன அலுவலராக வித்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக கவிதா ஆகியோர் பணியில் உள்ளனர்.

திண்டுக்கல் கோட்டாட்சியராக உஷா உள்ளிட்ட பலர் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., யாக முதன்முறையாக ஒரு பெண் பொறுப்பேற்க உள்ளார். சென்னை மாதவரம் துணை ஆணையராக பணிபுரிந்த ரவளிபிரியா, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய பொறுப்புக்களும் மகளிர் வசம் வந்துள்ளது. .

உள்ளாட்சிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு மகளிருக்கு வழங்கியபோதும், அதையும் கடந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 11 ஒன்றியங்களில் ஒன்றிய தலைவர்களாக மகளிர் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சிகளிலும் மகளிரின் ஆட்சியே உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய முதன்மை பொறுப்புக்களில் மகளிரே அதிகம் உள்ளனர்.

இந்நிலையில் மகளிர்களின் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம் வளர்ச்சிப்பாதையில் முதல் இடத்தை நோக்கி நடைபோடவேண்டும் என்பதே திண்டுக்கல் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in