Last Updated : 11 Jul, 2020 06:52 PM

 

Published : 11 Jul 2020 06:52 PM
Last Updated : 11 Jul 2020 06:52 PM

சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கடலூர், எம்ஜிஆர் திட்டில் மீனவர்கள் போராட்டம்

மீனவப் பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போலீஸார்

கடலூர்

கடலூர், எம்ஜிஆர் திட்டு ஆகிய இடங்களில் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கத் தடை விதித்து அரசு தடை விதித்துள்ளது.

அதேபோல கடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள், கடலூர் துறைமுகத்தில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகுகளுக்கு சீல் வைக்கச் சென்றனர். அதற்கு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தீர்வு எட்டப்படவில்லை.

இந்தநிலையில், இன்று (ஜூலை 11) கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா உட்பட சில மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குடும்பத்துடன் கருப்புக் கொடியேந்தி சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீனவப்பெண்கள் திடீரென கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் கரைக்கு வந்தனர்.

அதேபோல, சிதம்பரம் அருகே உள்ள எம்ஜிஆர் திட்டில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்று திரண்டு கருப்புக்கொடி ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திடீரென மீனவப்பெண்கள் சிலர் மண்ணெண்ணெய் கேனுடன் கடல் நீரில் இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கரைக்கு அழைத்து வந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x