Published : 11 Jul 2020 05:41 PM
Last Updated : 11 Jul 2020 05:41 PM

மதுரையில் ஏழைகள் பசியாற்றிய ‘அட்சயப்பாத்திரம்’: 10 ரூபாயில் சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா மரணம்

மதுரை

இன்றைய விலைவாசியில் 100 ரூபாய்க்கே அளவு சாப்பாடு போடும் உணவகங்களுக்கு மத்தியில் மதுரையில் வெறும் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி ஏழைகளின் பசியாற்றிய ராமு தாத்தா, மரணமடைந்தார். அவரது மரணம், அவரது உணவகத்தில் சாப்பிட்டு வந்த அடித்தட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகே அண்ணா பேருந்து நிலையம் அமைந்துள்ள பஜார் வீதியில் ஒரு சிறிய ஓட்டுக் கடையில் ஹோட்டல் நடத்தி வந்தவர் ராமு தாத்தா. இவரது சொந்த ஊர் திருமங்கலத்திற்கு அருகே வில்லூர் கிராமம்.

இவரது வயது 91. உழைப்பிற்கு ஒய்வுக்கு கொடுக்க வேண்டிய இந்த தள்ளாத வயதில் கல்லாப்பெட்டி முன் அமர்ந்து கொண்டு தன்னுடைய ஹோட்டலில் சாப்பிட வருவோரை வாங்க வாங்கன்னு இன்முகத்துடன் உபசரித்து வயிறார சாப்பாடு பரிமாறுவதிலும், சாப்பிட்டு செல்வோரிடம் சாப்பாடு எப்படியிருந்தது என்று அக்கறையுடன் விசாரிப்பதுமாக இளைஞர் போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார்.

உள்ளே 8 பேர் நான்கு பேர், வெளியே 4 பேர் சாப்பிடக்கூடிய அளவில் செயல்பட்ட இவரது சிறிய ஹோட்டலில் சாப்பிட கூட்டம் வரிசையில் நிற்கும்.

மதுரை அரசு மருத்துவனைக்கு வரும் நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்கள், சுற்றியுள்ள அன்றாட கூலித்தொழிலாளர்கள் இவரது உணவகத்தில் சாப்பிடுவார்கள்.

அம்மா உணவகம் வருவதற்கு முன்பே ராமு தாத்தாவின் இந்த மலிவு விலை உணவகம் கடந்த 50 ஆண்டாக அப்பகுதியில் செயல்படுகிறது.

ஆரம்பத்தில் கால் அணாவுக்கு சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா, அதன்பிறகு 1 ரூபாய், 2 ரூபாய், 3 ரூபாய், 5 ரூபாய் என்று சமீப காலமாக 10 ரூபாய்க்கு வழங்கி வந்தார்.

சாப்பாடு விலை குறைவு என்பதால் அதன் தரத்தை குறைக்கவில்லை.

காலையில் 2 வகை சட்டினியுடன் சுட சட இட்லி, தோசை, பொங்கலும், மதியம் 2 பொறியல், ரசம், சாம்பார், அப்பளம், மோருடன் சாப்பாடும் வெறும் 10 ரூபாய்க்கு வழங்கி வந்தார்.

இன்று விற்கிற விலைவாசிக்கு மதுரையில் 100 ரூபாய்க்கே அளவு சாப்பாடு போடும் ஹோட்டல்களுக்கு மத்தியில் 10 ரூபாயில் ஏழைகளின் பசியை போக்கி வந்த அட்சய பாத்திரமாக ராமு தாத்தா திகழ்ந்து வந்தார்.

நண்பர்கள், தெரிந்தவர்கள் செய்த உதவியால் இந்த உணவகத்தை அவர் நடத்தி வந்தார். இவரது சேவையை பாராட்டி மதுரையில் பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி கவுரவித்திருந்தது.

கடந்த சில மாதமாக வயோதிகத்தால் உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரால் கடையைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த அவர் இன்று மரணமடைந்தார்.

அவரது மரணம், அவரது உணவகத்தில் அன்றாடம் பசியாறி வந்த அன்றாட கூலித்தொழிலாளர்கள், ஏழை மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x