

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணப்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி எதிரே காலியாக உள்ள 5 ஏக்கரில் ரூ.9.15 கோடியில் அமைக்கப்பட உள்ள பூங்கா கட்டுமானப் பணியை இன்று (ஜூலை 11) அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு 44 மையங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்தான் அதிக எண்ணிக்கையில் இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இங்கு 26 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில் 24 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. உயர்தர மருத்துவமனைகளில் தேவைகளுக்கு ஏற்ப பிளாஸ்மா சிகிச்சை விரிவுபடுத்தப்படும். பிளாஸ்மா சிகிச்சைக்காக 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன. இச்சிகிச்சையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.