Last Updated : 10 Jul, 2020 09:29 PM

 

Published : 10 Jul 2020 09:29 PM
Last Updated : 10 Jul 2020 09:29 PM

புதுவை காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தகுதி நீக்கம்: சபாநாயகர் நடவடிக்கை

ஆட்சிக்கு எதிராகவும், முதல்வர், அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்ததாலும் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு அரசு மீது குற்றச்சாட்டுகளைச் சட்டப்பேரவையில் சுமத்தி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகூர் தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து இல்லை எனப் போராட்டம் நடத்தினார். முதல்வரைக் கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக கட்சி மேலிடத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏ தனவேலு, முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதுடன், மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத்தையும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அமைச்சர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க கட்சித் தரப்புக்கு வலியுறுத்தினர். ஆனால், எம்எல்ஏவாக இருப்பதால் கட்சி ரீதியான நடவடிக்கையை புதுச்சேரி காங்கிரஸ் எடுக்க இயலாது. கட்சி மேலிடமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்து டெல்லி சென்று புகார் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து ராஜ்நிவாஸ் சென்று ஆளுநர் கிரண்பேடியைத் தனவேலு எம்எல்ஏ சந்தித்தார். இது கட்சி வட்டாரத்தில் கடும் அதிருப்தியைக் கிளப்பியது. எதிர்க்கட்சித் தரப்புடன் இணைந்து செயல்படுவது தொடங்கி பல குற்றச்சாட்டுகள் தனவேலு மீது சுமத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து தனவேலு மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, அரசு கொறடா அனந்தராமன், சபாநாயகரிடம் புகார் அளித்தார். சபாநாயகர் சிவக்கொழுந்து, தனவேலு எம்.எல்.ஏ.விடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினார்.

தனவேலு, கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தனவேலு எம்.எல்.ஏ.,வுக்கு அவகாசம் அளித்து, விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, தனது வழக்கறிஞர்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என, தனவேலு எம்.எல்.ஏ., சபாநாயகரிடம் அனுமதி கோரினார். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கரோனா ஊரடங்கால் தனது வழக்கறிஞர்கள் வர முடியாததால் கூடுதல் அவகாசம் தர தனவேலு கோரினார். ஜூன் 3-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இறுதி வாய்ப்பு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. சாட்சிகளிடம் தனது வக்கீல் குறுக்கு விசாரணை செய்யக் கோரிக்கை வைத்திருந்தார்.

இச்சூழலில் இன்று (ஜூலை 10) இரவு எம்எல்ஏ பதவியிலிருந்து தனவேலுவைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் சிவக்கொழுந்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x