Last Updated : 10 Jul, 2020 02:09 PM

 

Published : 10 Jul 2020 02:09 PM
Last Updated : 10 Jul 2020 02:09 PM

புதுச்சேரியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் குப்பை சேகரித்து சேர்த்த பணத்தை கொடுக்க மறுத்ததால் கதறி அழுத மூதாட்டி: பணத்தை திருப்பி அளிக்க திமுக வலியுறுத்தல்

புதுச்சேரியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் குப்பை சேகரித்து சேர்த்த பணத்தை கொடுக்க மறுத்து அலைக்கழித்ததால் மூதாட்டி ஒருவர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியின் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள பொறையூர் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு பொறையூர், ஊசுடு, உளவாய்க்கால், அகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இங்கு பொறையூர் வாழப்பட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மனைவி கிருஷ்ணவேணி (90) என்ற மூதாட்டி குப்பை சேகரித்து அதில் கிடைக்கும் பணத்தை இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் சேமித்து வந்துள்ளார்.

அவ்வாறு ரூ.10 ஆயிரத்து 500 இருப்பு இருந்துள்ளது. தற்போது வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாததால் சடன் சங்கத்தில் பணத்தை எடுத்து குடும்ப செலவு பார்த்துக்கொள்ள முடிவு செய்த கிருஷ்ணவேணி, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வங்கிக்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள் பணம் இல்லை என்று கூறி அலைக்கழித்துள்ளனர். இந்நிலையில், நேற்று (ஜூலை 9) கிருஷ்ணவேணி அவரது பேரனை அழைத்துக்கொண்டு கடன் சங்கத்துக்கு சென்று பணம் கேட்டுள்ளார்.

அப்போதும் ஊழியர்கள் பணம் இல்லை என்று கூறியதோடு, அலட்சியமாக பேசியுள்ளனர். இதனால் தான் சேமித்த பணம் இல்லை என்று ஊழியர்கள் கூறியதால் மன உளைச்சலான அந்த மூதாட்டி கதறி அழுது தன்னுடைய பணத்தை தரும்படி கேட்டுள்ளார். ஆனாலும் பணத்தை வழங்கவில்லை. இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மூதாட்டியின் பேரன் கூறும்போது, "என்னுடைய பாட்டி குப்பை சேகரித்து கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் சேமித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக பணத்தை கேட்டு வீட்டுக்கும், வங்கிக்கும் நடந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருடைய பணத்தைத் தரவில்லை. கேட்டால் பணம் இல்லை என்று கூறுகின்றனர். அவரது மகன் மனநிலை பாதிக்கப்பட்டு, காணாமல் போய்விட்டார். தற்போது பாட்டி இந்த வயதிலும் தனியாக வசித்துக்கொண்டு உழைத்து சாப்பிட்டு வருகிறார். உழைத்த பணத்தைக் கேட்டால் அலட்சியமாக பதில் கூறுகின்றனர்" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக வங்கி ஊழியரிடம் கேட்டபோது, "சேமிப்பு கணக்கில் சேமிக்கப்படும் பணத்தை எடுத்து தான் நகை கடன் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறோம். தற்போது கரோனாவால் பொதுமக்கள் சேமிப்பு கணக்கில் இருந்த பணத்தை எடுத்துவிட்டனர். அதிகமாக நகைக்கடன் கொடுத்துள்ளால் தற்போது யாருடைய சேமிப்பு கணக்கிலும் பணம் இல்லை. ஆகையால் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு கூட்டுறவு சங்க தலைவரை தான் கேட்க வேண்டும்" என்றனர்.

இதுசம்பந்தாக கூட்டுறவு சங்க தலைவர் கூறுகையில், "இதுவரை ரூ.2.5 கோடிக்கு நகை கடன் வழங்கியுள்ளோம். அரசு தரவேண்டிய பணம் இன்னும் வரவில்லை. ஆகையால் வங்கியில் தற்போது பணம் இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்க முடியவில்லை. வேண்டுமென்றால் தற்போது ரூ.5,000 தருகிறோம். மீதி பணம் இப்போது தர முடியாது" என்றார்.

கதறி அழுது பணத்தை கேட்கும் மூதாட்டி

கூட்டுறவு கடன் சங்கத்தில் சேமித்த பணத்தையே இல்லை என்று கூறய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் இன்று (ஜூலை 10) வெளியிட்டுள்ள அளிக்கையில், "கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்தில் சிறுகச் சிறுக சேமித்த பணத்தை தர மறுத்தது அதிர்ச்சியளிக்கிறது. சிறப்பான புதுச்சேரி மண் இதுபோன்ற பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது இருப்பதை அறியும் போது மனம் பதைக்கிறது. துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இருந்தும் ஒரு கூட்டுறவு வங்கி மூதாட்டியின் சிறுசேமிப்பில் விளையாடுகிறது என்றால் அரசியல்வாதிகளாகிய நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

எனவே இதுபோன்ற விஷயங்களில் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த மூதாட்டியின் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x