Last Updated : 09 Jul, 2020 10:12 PM

 

Published : 09 Jul 2020 10:12 PM
Last Updated : 09 Jul 2020 10:12 PM

வந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி தவிப்பு

சண்முகப்பிரியா வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததற்கான ஒப்புதல் செய்தி.

தஞ்சாவூர்

'வந்தே பாரத்' விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி தவித்து வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழியைச் சேர்ந்தவர் விவசாயி காமராஜ். இவரது மகள் சண்முகப்பிரியா (21). இவர் ரஷ்யாவின் உக்ரைன் நாட்டில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், கரோனா தொற்று நடவடிக்கையின் காரணமாக, உக்ரைன் நாட்டில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், சண்முகப்பிரியா கல்வி நிறுவனத்துக்குட்பட்ட விடுதியில் தங்கியுள்ளார்.

இதற்கிடையில், இந்திய அரசு வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களைச் சிறப்பு விமானம் மூலம் 'வந்தே பாரத்' என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வரும் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தனர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேரில் 8 பேருக்கு விமானத்தில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், சண்முகப்பிரியாவுக்கு மட்டும் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்று (ஜூலை 9) இரவு உக்ரைனிலிருந்து சிறப்பு விமானம் டெல்லி வரவுள்ளது. இதில் சண்முகப்பிரியா வர முடியாததால், அவர் மனமுடைந்து தன்னை உடனடியாக அதே விமானத்தில் அழைத்து வர தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர், இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சண்முகப்பிரியாவின் தந்தை காமராஜ் கூறும்போது, "எனது மகள் உக்ரைன் நாட்டில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 100 பேர் படித்து வருகின்றனர். கரோனா பாதிப்பால் அங்குள்ளவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் இந்திய அரசு சிறப்பு விமானத்தை இயக்கி வருகிறது.

உக்ரைன் நாட்டுக்கு இயக்கப்படும் கடைசி விமானம் இன்று இரவு புறப்பட்டது. இதற்காக ரூ.47 ஆயிரம் விமானக் கட்டணம் செலுத்த வேண்டும். நெட்வொர்க் பிரச்சினையால் இந்தக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த முடியவில்லை.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 9 மாணவிகள் உள்பட 100 பேர் சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்னை வர உள்ளனர். இதில் எனது மகளுக்கு இடம் கிடைக்கவில்லை. நாங்கள் பணம் கட்டத் தயாராக உள்ளோம். எனது மகள் அங்கு தனியாக உள்ளார். அவரை அழைத்து வர தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x