

திருநெல்வேலி மாவட்டம் தென்கலம் பகுதியில் இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 8) அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, முதியவரின் உறவினர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு, முதியவரின் உடலைத் தகனம் செய்ய உதவி கோரினர். இதையடுத்து முதியவரின் உடலை பெற்றுக்கொண்ட எஸ்டிபிஐ கட்சி மற்றும் 'பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா' தன்னார்வலர்கள், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, இந்துமத வழக்கப்படி சிந்துப்பூந்துறை மின் மயானத்தில் முதியவரின் உடலைத் தகனம் செய்ய உதவினர்.
இதனிடையே கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த வீரவநல்லூரைச் சேர்ந்த 68 வயது முதியவர் இன்று (ஜூலை 9) அதிகாலையில் உயிரிழந்தார்.