Published : 09 Jul 2020 05:49 PM
Last Updated : 09 Jul 2020 05:49 PM

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு கோரி வழக்கு; உச்ச நீதிமன்ற முடிவுகள் தெரிந்தபின் விசாரணை: உயர் நீதிமன்றம்

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன. உச்ச நீதிமன்ற முடிவுகள் தெரிந்தபின்னர் இதனை விசாரிப்பதாகக் கூறிய உயர் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, அதிமுக, பாமக, மதிமுக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தொரடப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27% இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மருத்துவப் படிப்புகளில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இட ஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகள் இன்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஜூலை 13-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், அங்கு நிலுவையில் உள்ள வழக்குகளால் இங்குள்ள வழக்குகளின் விசாரணைக்குத் தடையில்லை என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டதன் அவசரம் கருதி விரைந்து விசாரிக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற முடிவுகளைத் தெரிந்தபின் விசாரிக்கலாம் எனக் கூறி வழக்கு விசாரணையை ஜூலை 17 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x