Published : 09 Jul 2020 03:37 PM
Last Updated : 09 Jul 2020 03:37 PM

சமூக நீதியின் அடிப்படைக்கு எதிரானது; கிரீமிலேயர் முறையைக் கைவிடுக: திருமாவளவன் வலியுறுத்தல்

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும்போது 'கிரீமிலேயர்' வருமான வரம்பைக் கணக்கிடுவதில் புதிய அம்சங்களைச் சேர்க்கும் மத்திய அரசின் முயற்சியை முற்றாகக் கைவிட வேண்டும். அதற்காக எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“மண்டல் கமிஷன் வழக்கில் 1992-ம் ஆண்டு தீர்ப்பளித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்தது. ஆனால், பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது எனக் கூறி ‘கிரீமிலேயர்’ என்ற பொருளாதார அளவுகோலை உருவாக்கியது.

அதனடிப்படையில் ஒரு லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வரம்பு உயர்த்தப்படவேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. அவ்வாறு உரிய காலத்தில் அந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. 12 ஆண்டுகள் கழித்து 2004 ஆம் ஆண்டுதான் அது ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

2008 ஆம் ஆண்டு 4.5 லட்சம் என ஐக்கிய முன்னணி அரசு அந்த வருமான வரம்பை உயர்த்தியது. அதன் பின்னர் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அந்த வரம்பை ரூ12 லட்சமாக உயர்த்துமாறு கடிதம் அளித்து வலியுறுத்தினோம். அதனடிப்படையில் 2013 மே மாதத்தில் கிரீமிலேயர் வரம்பை ரூ.6 லட்சமாக மட்டும் உயர்த்தி மத்திய அரசு ஆணை வெளியிட்டது. அது 2017 ஆம் ஆண்டு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது.

கிரீமிலேயர் வரம்பை இந்த ஆண்டு சீராய்வு செய்யவேண்டிய நிலையில் அதனை ரூ.16 லட்சமாக உயர்த்தவேண்டும் என இப்போது மத்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதற்கு எந்த பதிலையும் சொல்லாத மத்திய அரசு, கிரீமிலேயரைக் கணக்கிடும்போது பெற்றோரின் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தையும் சேர்த்து திருத்தம் கொண்டுவருகிறது.

இதனால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இட ஒதுக்கீடு பெற முடியாமல் ஆக்கப்படுவர். இது பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டு உரிமையை முற்றாக ஒழிப்பதற்கான சதியாகும். இந்த சமூக அநீதியை மத்திய அரசு உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் பங்கேற்கும் இணையவழி கண்டனக் கூட்டம் ஒன்று நாளை (20-07-2020) மாலை 7 மணிக்கு விசிக சார்பில் ஒருங்கிணைக்கப்படுகிறது”.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x