Published : 09 Jul 2020 01:34 PM
Last Updated : 09 Jul 2020 01:34 PM

வெப்பச் சலனம்; உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்‌.

கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. மதுரை தெற்கு மதுரை மாவட்டத்தில் 8 செ.மீ., காரையூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 செ.மீ., வேலூர் மாவட்டத்தில் 6 செ.மீ., மதுரை மாவட்டம் இடையப்பட்டி மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஜூலை 9-ம் தேதி வடக்கு குஜராத் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 11-ம் தேதி, 12- ம் தேதி வடக்கு அரபிக்கடல் மற்றும் குஜராத் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x