Published : 09 Jul 2020 12:25 PM
Last Updated : 09 Jul 2020 12:25 PM

'கப்பலில் இடமில்லை' என்று ஈரானில் விடப்பட்ட 44 தமிழக மீனவர்கள்; மீட்க வலியுறுத்தி முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

ஈரான் நாட்டில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 44 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூலை 9) முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதம்:

"கரோனா காரணமாக சர்வதேசப் போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், ஈரான் நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 562 மீனவர்கள் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 750 மீனவர்கள், உணவு, தங்குமிடம் இல்லாமல் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், இந்திய அரசு ஈரான் நாட்டிலிருக்கும் தமிழக மீனவர்களை மீட்க கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக, ஒவ்வொரு மீனவரும் பயணக்கட்டணம் உட்பட ரூ.10 ஆயிரம் செலவை ஏற்க வேண்டியிருந்தது.

'கப்பலில் இடமில்லை' என்ற காரணத்தைக் கூறி 44 தமிழக மீனவர்களை அங்கேயே விட்டுவிட்டு கப்பல் ஈரானிலிருந்து புறப்பட்டுவிட்டது. கப்பலில் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான வெளியேற்ற முத்திரை பெற்ற பிறகு தமிழகம் திரும்ப இயலாத நிலைக்கு தள்ளப்பட்ட 44 மீனவர்களின் நிலை மேலும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

வெளியேற்ற முத்திரை பெற்றுவிட்டதால் அரசுரீதியான உதவிகளை, ஈரான் அரசிடம் பெற இயலாமல் சென்றுவிட்டது. இந்த விடுபட்ட மீனவர்களை மீட்க விமானம் ஏற்பாடு செய்து அதற்கான பயணச் செலவை தமிழக மீனவர்களை ஏற்கக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. வாழ்வாதாரத்திற்காக கூலி வேலைக்குச் சென்றவர்களிடம், நான்கு மாதங்களாக வேலையும், வருமானமுமின்றி தவித்து வருபவர்களிடம் இவ்வளவு பெரிய தொகையினை பயணக் கட்டணமாகக் கேட்பது வேதனைக்குரியது.

எனவே, ஈரானில் விடுபட்ட 44 தமிழக மீனவர்களை இந்திய அரசு தன் சொந்தச் செலவில் விமானத்தில் அழைத்து வர தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமெனவும், அவ்வாறு இந்திய அரசு ஏற்க மறுக்கும் பட்சத்தில், தமிழக அரசு தன் செலவிலாவது மீட்க உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அதுவரை ஈரானில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்பாடு செய்து தருவதோடு, அவர்களைப் பிரிந்து எந்த வருமானமும் இல்லாமல் வாடும் மீனவக் குடும்பங்களுக்குத் தகுந்த இழப்பீட்டினை வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x